*இது ஒரு மத்திய அமைச்சர் வீடு என்று சொன்னால் நம்புவீர்களா?* மகன் மத்திய அமைச்சர்... பெற்றோர் விவசாயக் கூலிகள்! அதுவும் தமிழகத்தில்..

 



*இது ஒரு மத்திய அமைச்சர் வீடு என்று சொன்னால் நம்புவீர்களா?*


மகன் மத்திய அமைச்சர்... பெற்றோர் விவசாயக் கூலிகள்!

அதுவும் தமிழகத்தில்..


*🤔🤔!!!!!*


எல்.முருகன் 😍


       நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கோனூர் எனும் சிறு கிராமம், முக்கியத்துவம் வாய்ந்த கிராமமாக மாறியிருக்கிறது. தமிழகத்திலிருந்து ஒரே மத்திய அமைச்சராகப் பதவியேற்றுள்ள எல்.முருகனின் சொந்த ஊர் இது. 15 ஆண்டுகளாக வழக்கறிஞர், எஸ்.சி ஆணையத்தின் தேசிய துணைத்தலைவர், பா.ஜ.க மாநிலத் தலைவர், மத்திய இணை அமைச்சர் என எல்.முருகனின் கிராஃப் உயர்ந்திருக்கிறது.


சிறிய கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, எளிய குடும்பப் பின்னணியோடு முட்டி மோதி இந்த உயரத்தை வந்தடைந்திருக்கிறார். மருத்துவராக இருக்கும் மனைவி கலையரசி, இரண்டு குழந்தை கள்  என்று எல்.முருகன் குடும்பத்தோடு சென்னையில் வசிக்கிறார். அவரின் பெற்றோர் சொந்த கிராமத்தில், பூர்வீக வீட்டில் எளிமையாக வசிக்கிறார்கள். இன்றும் விவசாய வேலைகளுக்குக் கூலியாட்களாகத் தாய், தந்தை இருவருமே செல்கிறார்கள்.


சைரன் கார், பாதுகாப்புக்கு போலீஸ் என்று மகன் பவனி வரத் தொடங்கினாலும், முருகனின் தந்தை லோகநாதன், மண்வெட்டியை சைக்கிள் கேரியரில் மாட்டிக்கொண்டு வயல் வேலைக்குக் கிளம்பிவிடுகிறார். அவர் மனைவி வருதம்மாளும் வயல் வேலைக்குச் செல்கிறார். கோனூரில் அருந்ததியர் தெருவில் இருக்கிறது, அவர்களது வீடு. ஹாலோபிளாக் கற்களைக் கொண்டு எழுப்பப்பட்ட சுவர்களின் மீது ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளால் கூரை வேய்ந்திருக்கிறார்கள். மகன் அடைந்திருக்கும் உயரத்தின் ‘கனம்’கூடத் தெரியாமல், வெள்ளந்தியாகப் பேசிச் சிரிக்கிறார்கள் இருவரும். வயலில் வேலை செய்துகொண்டிருந்த லோகநாதனிடம் பேசினேன்.


“எனக்கு ரெண்டு பசங்க. மூத்த பையன்தான், எல்.முருகன். இரண்டாவது பையன் ராமசாமி. அவனுக்குக் கல்யாணம் ஆகி மூணு குழந்தைங்க இருக்காங்க. 2016-ம் வருஷம் அவனுக்கு உடம்புக்கு முடியாமப் போய் இறந்துட்டான். மருமகள் சாந்தியும், மூணு பேரப்பிள்ளைகளும் இங்கதான் இருக்காங்க. எங்களுக்குச் சொந்தமா கால் காணி விவசாய நிலம்கூட இல்லை.


நான் ஒண்ணாம் வகுப்புதான் படிச்சேன். 13 வயசிலேயே விவசாய வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டேன். வருதம்மாளோடு கல்யாணம் ஆகி, ரெண்டு பசங்களும் பொறந்தாங்க. முருகன், சின்ன வயசிலேர்ந்து நல்லா படிப்பார். நானும், என் பொண்டாட்டியும் வேலைக்குப் போய் கிடைக்குற சொற்பக் காசுல குடும்பத்தை கஷ்டப்பட்டு நடத்துவோம். அதைப் பார்த்துட்டு, பசங்களோடு சேர்ந்துகிட்டு அவரும் சமயத்தில் கிடைக்கிற வேலைக்குப் போவார். ஆனாலும் படிப்புல முழு கவனமா இருந்தார். அஞ்சாவது வரை கோனூர்ல உள்ள ஆரம்பப்பள்ளியில்தான் படிச்சார். பொறவு, கோனூர்லேயே இருக்கும் உயர்நிலைப் பள்ளியில் படிச்சார். பதினோராம் வகுப்பையும், பன்னிரண்டாம் வகுப்பையும் பரமத்தி பள்ளியில படிச்சார்.


பிறகு, ‘நான் வக்கீலுக்குப் படிக்க சென்னை போறேம்பா’னார். ‘எங்களால் முடிஞ்ச பண உதவியைப் பண்றோம். நீ விரும்புறதைப் படிப்பா’ன்னு சொன்னோம். கஷ்டத்தை உணர்ந்து நல்லா படிச்சார். படிச்சு முடிச்சதும் அங்கேயே தங்கி, வக்கீலா வேலை செஞ்சார்.


அவருக்குக் கலையரசியைப் பார்த்துப் பேசி, திருமணம் பண்ணி வெச்சோம். அவங்க சென்னையில் தங்கினாங்க. அதன்பிறகு எங்ககிட்ட, ‘நீங்க வயல் வேலைக்கெல்லாம் போக வேண்டாம். எங்களோடு வந்து சென்னையில் இருங்க’ன்னு அடிக்கடி சொல்வார். ஆறு மாசத்துக்கு ஒரு தடவை போய் நாலு நாள் அவரோடு தங்கிட்டு வருவோம். ஆனா, அந்த நாலு நாளே அங்க எங்களால இருக்க முடியாது. வாய்க்கா வரப்புன்னு சுத்தின இந்த உடம்பை, நாலு சுவத்துக்குள்ள சும்மா சாய்க்க முடியாது. ஊருக்கு பஸ் ஏறிடுவோம். ஏதோ, ஆணையத்துல பதவி, கட்சியில் தலைவர் பதவியெல்லாம் கொடுத்தாங்க. அவரோட உழைப்புக்கு பல உயரத்துக்குப் போவார்னு தெரியும். இப்போ, ‘எனக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்திருக்காங்க’னு அவரு போன் பண்ணிச் சொன்னப்ப, அது என்ன பதவின்னுகூட எங்களுக்குத் தெரியலை. ஆனா, அவர் மகிழ்ச்சியா சொன்னதும், ஏதோ பெரிய பதவின்னு மட்டும் உணர்ந்தோம். அதனால, எங்களுக்குப் பூரிப்பா இருந்துச்சு.


கட்சித் தலைவரானதுக்குப் பொறவு, எங்களை வீட்டுக்கு வந்து பார்த்துட்டு, ‘பத்திரமா இருங்க’ன்னு சொன்னார். அருகில் இருக்கும் வீட்டுப் பிள்ளைகளை அழைத்து, ‘நல்லா படிங்க. அப்பதான் ஒரு வேலைக்குப் போக முடியும்’னு அறிவுரை பண்ணினார். கேட்காமலேயே தேவைப்படுற உதவிகளைப் பண்ணுவார். ஆனா அவருக்குத் தொந்தரவு தர எனக்கு விருப்பமில்லை. அவரே அரசுக் குடியிருப்பில்தான் இன்னும் இருக்கார். அவர் நல்லா இருக்கணும்னுதான் நாங்க பாடுபட்டோம். எங்க கண்ணுக்கு முன்னாடி அவர் நல்ல நிலைமைக்கு வந்துக்கிட்டு இருக்கார். அதைப் பார்க்க கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கு. பெத்தவங்களுக்கு இதைவிட வேறென்ன பெருமை வேண்டும்?” என்றவரிடம், “மகன் மத்திய இணை அமைச்சர். நீங்க இன்னமும் கூலி வேலை பார்க்க வரலாமான்னு யாரும் கேட்பார்களா?” என்று கேட்டோம்.


“அப்படியெல்லாம் யாரும் கேட்கமாட்டாங்க. முருகனும் சரி, நாங்களும் சரி, உழைப்பை மட்டும் நம்புறோம். அவருக்குப் புடிச்ச கட்சியில் சேர்ந்து, தன்னோட உழைப்பால, திறமையால இந்த உயரத்துக்கு வந்திருக்கார். கை, கால் நல்லா இருக்குற வரைக்கும் நான் உழைக்க நினைக்கிறேன். மகன் அமைச்சரானதனால, என்னோட உழைக்கும் குணத்தை மாத்திக்க முடியுமா?” என்கிறார் லோகநாதன்.


மகன் மத்திய அமைச்சர்... பெற்றோர் விவசாயக் கூலிகள்!

மகன் மத்திய அமைச்சர்... பெற்றோர் விவசாயக் கூலிகள்!

எல்.முருகனின் தாய் வருதம்மாள், “சின்ன வயசுலேயே கஷ்டத்தோடு வளர்ந்ததால, வாழ்க்கையில் நல்லா வரணும்னு கடுமையா உழைச்சார். இப்போ, கட்சியில இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார். அவரு சின்ன வயசில் யார்கிட்டயும் கெட்ட பேரு வாங்குனதில்லை. இப்போ அரசியலிலும் அப்படியே இருக்கார். அவர் உழைப்புக்கும், குணத்துக்கும் இன்னும் ஒசரத்துக்குப் போவார். ஜனங்களுக்கும் நிறைய செய்வார்” என்றார்.


கீழ்சாந்தம்பூர் பழனிசாமியிடம் பேசினோம்.


“முருகன் என் குடும்ப நண்பர் மாதிரி. படிப்பு, கடுமையான உழைப்பு மூலம் இன்று மத்திய அமைச்சர் பதவி வரை உயர்ந்திருக்கிறார். படிக்கிற காலத்திலேயே மத்த பசங்களைப் போல் வயசுக்கு ஏத்த பகட்டு பண்ணாமல், அரசியல், ஊர்ப் பொதுப் பிரச்னைகள்னு சமூக அக்கறையோடு செயல்படுவார். அவர் வக்கீலுக்குப் படிச்சப்ப நான் ஒன்றிய கவுன்சிலரா இருந்தேன். எனக்கு அரசியலில் முன்னேற யோசனை எல்லாம் சொல்வார். அவர் பேச்சைப் பார்த்து, ‘இவர் அரசியல்ல பெரிய ஆளா வருவார்’னு நினைச்சேன். அதேபோல், இப்போ உயர்ந்த இடத்துக்கு வந்திருக்கிறார்.


வருதம்மாள், லோகநாதன்


பழனிசாமி


அவர் பா.ஜ.க கட்சித் தலைவரானதுக்குப் பிறகு இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். அவர் அரசியலில் உயர்ந்தாலும், அவரின் பெற்றோர் இன்னமும் விவசாயப் பணியாளர்களாக வேலைக்குப் போறாங்க. எங்க வயலுக்குக்கூட சமயத்தில் முருகன் தந்தை வேலைக்கு வருவார். ‘இன்னும் நீங்க ஏன் வேலைக்குப் போகணும்?’னு கேட்பேன். அதுக்கு அவர், ‘நான் வேலைக்குப் போறது பணத்துக்காக மட்டும் இல்லை. வேலை பார்க்காமல் என்னால் மோட்டுவளையைப் பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்க முடியாது’ன்னு சொல்லிட்டு, தொடர்ந்து வேலைக்குப் போய்க்கிட்டிருக்கார். ‘முருகன் தடுத்தே அவர் கேட்கலை, நான் தடுத்தா கேட்கபோறார்?’னு யோசனை சொல்றதையே விட்டுட்டேன்” என்றார்.


உழைப்பின்மீது தீராக்காதல் கொண்ட அந்தக் குடும்பத்தின் மீது பிரமிப்பு வளர்கிறது...

இது பிஜேபி யில் மட்டுமே சாத்தியம்..


நன்றி ஆனந்த விகடன்.

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்