தமிழகத்துக்கும் காசிக்குமான தொடர்புகள் வரலாற்றில் மிக தொன்மமானவை, மிகமிக பழமையானவை, மாகாபாரத காலத்தில் இருந்தே அந்த தொடர்பு உண்டு

 




"காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்"


"கங்கை நதிபுறத்து கோதுமைபண்டம்

 காவேரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம்" என்றும், காசி தமிழக இணைப்பை கடந்த நூற்றாண்டிலே சொல்லிவைத்தான் நம் பாரதி..


நாம் சில நாட்களுக்கு முன்பு காசிக்கும் தமிழகத்துமான தொடர்புகளை தேசிய கட்சியான பாஜக பேசவில்லை, மோடியும் தன் காசி மறுசீரமைப்பு விழாவில் குமரகுருபரர் போன்றோரை சொல்லவில்லை என சொல்லியிருந்தோம்


இப்பொழுது அந்த குறையினை களைகின்றது பாஜக, இது நல்ல விஷயம். காசிக்கும் தமிழகத்துக்குமான தொடர்புகளை ஒவ்வொரு தமிழக இந்துவும், அப்படியே எல்லா இந்துக்களும் அறிய வேண்டும்


இதெல்லாம் நாம் சொல்லித்தான் நடந்தது என எம்மால் சொல்லமுடியாது, அப்படி சொன்னால் அது மடத்தனம், எது நடக்கவேண்டுமோ அது சரியான காலத்தில் சரியாக நடக்கின்றது


"எல்லாம் எம்பெருமான் செயல்"


தமிழகத்துக்கும் காசிக்குமான தொடர்புகளை கொண்டாடும் நேரம், நாமே சில விஷயங்களை சுட்டி காட்டி வைக்கலாம், அது சரியானதாக இருக்கலாம்


தமிழகத்துக்கும் காசிக்குமான தொடர்புகள் வரலாற்றில் மிக தொன்மமானவை, மிகமிக பழமையானவை, மாகாபாரத காலத்தில் இருந்தே அந்த தொடர்பு உண்டு


சங்ககாலத்துக்கு முற்பட்ட தமிழக மூவேந்தர்கள் காசிக்கு சென்றதையும் காசிக்கு நிதி கொடுத்ததையும் கல்வெட்டுக்களில் காணலாம், இமயம் வரை படை நடத்திய மூவேந்தர்கள் காசியினை மனதார கொண்டாடினார்கள்


சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு சிலை எடுத்தபொழுது அக்கல்லை இமயத்தில் இருந்து கனகவிசயரின் தலையில் சுமக்க வைத்தபொழுது, காசியில் இருந்துதான் கங்கை நீரை எடுத்துவந்தான்


எல்லா மன்னர்கள் வாழ்விலும் இந்த வழமை இருந்தது, வயதான மன்னர்கள் காசிக்கு சென்று உயிர்நீத்த வரலாறு உண்டு


அப்படி செல்லமுடியாதோர் வடக்கு நோக்கி அமர்ந்து உயிர்நீத்தான் என்பது வரலாறு, எத்தனையோ திசைகள் இருக்க ஏன் வடக்கு நோக்கி தமிழக இந்துக்கள் அமர்ந்தார்கள் என்றால் காசியினை நினைந்து, காசியில் இறப்பதாக நினைந்து காசி இருக்கும் வடக்கு நோக்கி அமர்ந்தார்கள்


"திருவாரூரில் பிறந்தால் முக்தி காசியில் இறந்தால் முக்தி காஞ்சியில் வாழ்ந்தல் முக்தி சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, திருவண்ணாமலையினை நினைத்தால் முக்தி" என்பது தமிழக இந்துக்கள் வாக்கு


அதாவது தமிழகத்தின் ஆலயம் போலவே காசியினை தங்கள் இயல்பான ஆலயமாக கருதி சொன்னார்கள், காசி தொலைவு என்றோ, எங்கோ இருக்கும் ஆலயம் என்றோ அவர்கள் கருதவில்லை


காசி தங்கள் ஆலயங்களில் ஒன்று என்றுதான் கருதி வழிபட்டு வந்தார்கள், காசி தங்கள் உரிமை என்பதை மிக உறுதியாக சொன்னார்கள்


காரைக்கால் அம்மையார் கயிலாயம் செல்லும் போது காசியினை தரிசித்தார் என்பது வரலாறு


பட்டினத்தார் முழு ஞானம் பெற்றது காசியில்தான் என்பதும் தன் மிகசிறந்த சீடன் பத்ருஹரியினை அவர் அங்குதான் சந்தித்தார் என்பதும் வரலாறு


தமிழகத்துக்கும் காசிக்குமான தொடர்புகள் தமிழக கல்வெட்டிலும் இலக்கியங்களிலும் எல்லா இடங்களிலும் வழிநெடுக காணபடுகின்றன‌


அது தேவார வைப்புதலமாக இருந்தது, இருக்கின்றது என்பதை சம்பந்த பெருமான் பாடுகின்றார்


"மாட்டூர் மடப் பாச்சிலாச்சிராமம் மயிண்டீச்சரம் வாதவூர் வாரணாசி 

காட்டூர் கடம்பூர் படம்பக்கம் கொட்டும் கடல் ஒற்றியூர் மற்று உறையூர் அவையும் 

கோட்டூர் திருவாமாத்தூர் கோழம்பமும்  கொடுங்கோவலூர் திருக் குணவாயில்" 


அவரை போலவே அப்பரும் பாடுகின்றார், 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 6-வது பாடலில் காசி வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


"மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர்  

வக்கரை மந்தாரம் வாரணாசி 

வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி 

விளமர் விராடபுரம் வேட்களத்தும் 

பெண்ணை அருட்டுறை தண் பெண்ணாகடம் 

பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும் 

கண்ணை களர் காறை கழிப்பாலையும் 

கயிலாய நாதனையே காணலாமே"


அப்படியே இன்னும் அப்பர் சுவாமிகளின் 6-ம் திருமுறையில் 7-வது பதிகத்தில் 11-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது


"தேனார் புனற்கெடில வீரட்டமும்  

திருச்செம்பொன்பள்ளி திருப்பூவணம் 

வானோர் வணங்கும் மணஞ்சேரியும் 

மதில் உஞ்சை மாகாளம் வாரணாசி 

ஏனோர்கள் ஏத்தும் வெகுளீச்சரம் 

இலங்கார் பருப்பதத்தோடு ஏணார் சோலைக் 

கானார் மயிலார் கருமாரியும் 

கறைமிடற்றார் தம்முடைய காப்புக்களே"


அபிதான சிந்தாமணி எனும் நூல் இன்னும் சொல்கின்றது


" இதன் பெருமை சொல்லில் அடங்காததாக உள்ளது. ‘இத்தலத்தில் உயிர் நீங்கும் ஆன்மாக்களுக்குப் பார்வதி பிராட்டியார் சிரம பரிகாரம் செய்யச் சிவமூர்த்தி தாரக மந்திரம்  உபதேசித்து, முக்தி ஈவார்” என்று இத்தலத்தின் பெருமையை  உரைக்கிறது அந்நூல்


காசி மஹோத்மயம் என்றொரு தனி நூலே தமிழ் இலக்கியத்தில் காசி பற்றி உண்டு


இப்படி காசிக்கும் தமிழகத்துக்குமான தொடர்பு பெரிது, மன்னர்கள் மட்டுமல்ல பூம்புகார் செட்டியார்களும் காசிக்கு அள்ளி கொடுத்தார்கள்


கடலுள் மூழ்கிய அந்த பூம்புகார் ஒருகாலத்தில் பெரும் துறைமுகமாக இருந்தபொழுது கலிங்கம், வங்கம் என கலம் செலுத்திய செட்டியார்கள், கங்கையில் கலம் விட்டு காசியினை பெரிதும் கொண்டாடினார்கள், அவர்கள் அமைத்தமடம் அன்றே பல உண்டு


அதாவது பட்டினத்து செட்டி காலத்திலே உண்டு


அதன் தொடர்ச்சி நீண்டுகொண்டே வந்தது, தமிழர்கள் காசிக்கு செல்லவும் தங்கவும் இந்த மடங்கள் பெரிதும் உதவின, தமிழக மடங்களில் ஓலை பெற்று காசிக்கு சென்று மாற்றி பொருளாக பெரும் காசோலை முறை அன்றே இருந்தது


பின்னாளைய பவுத்த சமண குழப்பங்களும், ஆப்கானிய படையெடுப்பும் காசியினை குலைத்தாலும் ஆதிசங்கரர் அவருக்கு அடுத்த இந்துமன்னர்கள் காலத்தில் காசி மீள மீள தமிழக தொடர்புகளும் தொடர்ந்தன‌


ஆதிசங்கரர் காசியில்தான் இந்துமதத்தை மீட்டெடுத்தார், அவர் பிறந்த காலடி முன்னாள் சேரநாடு எனும் வகையில் அவர்தமிழரே


காசிதான் அவரை மிகபெரும் அற்புதமெல்லாம் செய்யவைத்தது


தமிழகத்தில் பெரும் மாற்றங்களைசெய்த ராமானுஜர் வாழ்வினை மாற்றியதும் காசியே


தமிழக மன்னர்கள் வடக்கே செல்வதும் வட இந்திய மன்னர்கள் தென்னக ஆலயங்களுக்கு வருவதும் வழமை, மன்னர் என்றல்ல எல்லா பக்தர்களும் அப்படி வந்தார்கள்


பெரும் பனி மலையும் பிரதான ஆறுகளை காண தமிழர்களுக்கும் , அங்கே காணமுடியா கடலை காண வடமக்களுக்கும் ஆசை பெரிதாக இருந்தது, அந்த ஆசையிலும் ஆன்மீகத்தை கலந்து ஒரே தேசமாக்கினார்கள்


காசிக்கு தமிழக மன்னர்கள் செய்த திருபணி போலவே ராமேஸ்வர ஆலயத்துக்கு வட இந்திய மன்னர்களும், நேபாள மன்னர்களும் செய்த திருபணி உண்டு, இன்றும் நேபாள மன்னர் ராமேஸ்வர ஆலயத்தின் அறங்காவலரில் ஒருவர், முக்கிய தர்மகர்த்தா


அப்படியான தொடர்புகள் கொண்ட காசிக்கும் தமிழகத்துக்குமான உறவுகள் மொகலாயர் காசியினை ஆளும்பொழுது சீர்குலைந்தன, காசி செல்லும் வழியில் எழுந்த பாமினி சுல்தானியங்களும் அதை இன்னும் சீர்குலைத்தன‌


தமிழகத்தை திருமலை நாயக்கன் ஆளும்பொழுது தமிழக பெரும் ஞானி குமரகுருபரர் காசிக்கு சென்று ஷாஜகானின் மகனான தாரா ஷிக்கோவிடம் பெரும் அதிசயம் செய்து காசியினை மீட்டார்


அவர் அங்கு அவமானபடுத்தபட்டதும் பின் "சகலகலாவல்லி மாலை" பாடி சிம்மத்தில் அமர்ந்து உருது பேசி அதிசயக்க வைத்ததும் அதைகண்ட ஷிக்கோ அஞ்சி அவருக்கு நிலமும் மடமும் கொடுத்தது வரலாறு


சிவாஜி எழுந்து மிரட்டிய காலங்களில் காசியினை ஒழிக்க அவுரங்கசீப் முயன்றபொழுது பழுக்க காய்ச்சிய இரும்பை தன் கைகளால் பிடித்து அணைத்த அதிசயத்தை செய்து மொகலாயரை மிரள வைத்தவர் அந்த குமரகுருபரர்


அவராலே காசி ஆலயத்தை விடுத்து அதன் அருகே பள்ளிவாசல் கட்டினான் அவுரங்கசீப்


இப்படி தமிழர்களால் காக்கபட்டதுதான் காசி ஆலயம் 


ஆம், அன்றிலிருந்து இன்றிரை காசிக்கும் தமிழகத்துக்குமான தொடர்புகள் அப்படியானவை, குமரகுருபரர் காசியினை மீட்டதில் இருந்து செட்டியார் குலமும் தன் சேவையினை மீட்டது


இன்றும் காசி ஆலயத்துக்கு சந்தணம் அரைப்பதும் பல சேவை செய்வதும் தமிழக செட்டியார்களே, மூவேந்தர் கால அந்த சேவை இன்றும் தொடர்கின்றது


இந்த தமிழர் காசி தொடர்பில் உருவான பெரும் ஞானபிழம்புதான் நெல்லையின் சுப்பிரமணிய பாரதி, பாரதம் ஒன்றையே சுவாசித்து பருகி வாழ்ந்த அந்த ஞானபிம்பம் அங்குதான் உருவானான்


அவன் பலகாலம் காசிக்கும் தமிழகத்துக்கும் இருந்த அந்த ஒற்றுமை உணர்வின் நடமாடிய வடிவம், பேசிய சக்தி, அந்த தொடர்பை பாடிய தொடர்ச்சி


ஒன்றல்ல இரண்டல்ல தமிழகத்துக்கும் காசிக்குமான தொடர்புகள், எக்காலமும் அது இருந்துகொண்டே இருந்தது இனிவரும் காலத்திலும் அது இருக்கும்


தமிழகத்தில் மொகலாய ஆற்காடு நவாபும் அவனை தொடர்ந்து பிரிட்டிசாரும் வந்த காலங்களில் இந்த தொடர்பு மங்கிற்று அல்லது மறைக்கபட்டது, அதன் பின்வந்த காங்கிரஸ் திராவிடமும் அதை அப்படியே தொடர்ந்தது


இப்பொழுது பாஜக அந்த காசி தமிழக தொடர்புகளை மீட்டெடுத்து ஒவ்வொரு மக்களுக்கும் கொண்டுசெல்ல முன்வருகின்றது


இது நடக்கட்டும், நன்று நடக்கட்டும்


காசியும் தமிழகமும் கொண்டிருந்த இந்த பண்டைய தொடர்புகள் வெளிவர காசி நாதனும், அன்னை மீனாட்சியும் எல்லா ஆசிகளையும் வழங்கட்டும்


வடக்கே காசிக்கு சென்றதன் அடையாளமாகத்தான் இங்கே தென்காசி என்றும் தென்கச்சி என்றும் ஏகபட்ட ஊர்களையும் ஆலயங்களையும் பாண்டியரும் இதர மன்னர்களும் அமைத்து காசி விஸ்வநாதனை அமர்த்தினார்கள்


வடக்கே காசிக்கு செல்லமுடியாதோர் இங்கே காசியப்பனை காண வழிசெய்தார்கள், அப்படிபட்ட தமிழகம் இது


அந்த தொடர்பெல்லாம் வெளிவரட்டும்


காசிக்கும் தமிழகத்துக்கும் நேரடி ரயில்களும் விமானங்களும் பெருகட்டும், கன்னியாகுமரி காசி ரயில் சேவைகள் அதிகம் வரட்டும்


வடக்கத்திய இந்துக்கள் இங்கும், இந்து தமிழர்கள் வடக்கே காசிக்கும் செல்ல எல்லா வழிகளும் திறக்கபடட்டும்


இந்த "காசி தமிழ்சங்கமம்" முழு வெற்றியடையட்டும்


நாம் உறுதியாக சொல்கின்றோம் தமிழக ஆதீனங்களும் மடங்களும் இந்த தொடர்பை பற்றிய எல்லா ஆதாரன்களையும் கொண்டிருக்கின்றன, அவைகளுக்கு காசி தமிழக தொடர்புகளெல்லாம் நன்கு தெரியும்


அவர்கள் பேசட்டும், திராவிடத்துக்கு அஞ்சாமல் பேசட்டும், பேசவேண்டும், பேசுவார்கள் என எதிர்பார்ப்போம்


500 ஆண்டுகாலமாக அடக்கபட்ட மறைக்கபட்ட இந்த பெருமைகள் தொடர்புகள் மெல்ல வெளிவரட்டும், அந்த வெளிச்சத்தில் வெள்ளைசாயம் பூசபட்ட நரிகள், இதுகாலம் சிம்மமென ஏமாற்றிய நரிகள் ஓடட்டும்


மிக சரியான விஷயத்தை பாஜக செய்கின்றது


இதெல்லாம் தமிழக ஆலயங்களிலில் காஞ்சிமுதல் கன்னியாகுமரி வரை இருக்கும் எல்லா இந்து ஆலயங்களில் சிவாலயங்களில் மடங்களில் பெரிதாக கொண்டாடபட வேண்டும்


ஆனால் திராவிட பிடியில் இருக்கும் ஆலயங்களும் மதங்களும் இதனை எப்படி எதிர்கொள்ளும் என்பது ஒன்றும் ரகசியமல்ல‌


இதனால் அதை மீறித்தான் ஒவ்வொரு இந்துவும், ஒவ்வொரு பாஜக உறுப்பினரும் இதனை வெற்றியடைய செய்யும் வகையில் மிகபெரிய உழைப்பை கொடுக்க வேண்டும், கொடுப்பார்கள்


"காசி துலங்க பாரதம் துலங்கும்" என்பது வாக்கு, இதோ துலங்குகின்றது


இதனை நாம் சொன்னோம் அதனால் செய்தார்கள் என மடதனமாக உளற நாம் தயாராக இல்லை, அப்படி சொன்னால் அது பாவமும் பெரும் தவறுமாகும்


எல்லா இந்துக்களுக்கும் அடியார்களுக்கும் இருந்த வருத்தம் எமக்கும் இருந்தது அதைத்தான் சொன்னோம், உரிய காலத்தில் எல்லாம் சரியாக நடக்கின்றது


"தண்ணு லாம்பொழிற் காசித் தெருவினீர்

தரித்தி டுந்தவக் கோலமுஞ் சூலமும்

பெண்ணொ டாடுமப் பிச்சனுக் கொத்தலாற்

பிச்சி யாரெனும் பேர்தரித் தாடுவீர்

வெண்ணி லாமுகிழ்க் குங்குறு மூரலால்

வீணி லேயெம் புரத்தெரி யிட்டநீர்

கண்ணி னாலுமிக் காமனைக் காய்ந்திடிற்

கடவு ணீரென் றிறைஞ்சுதுங் காணுமே.


காணுங் காணு நதிகளெல் லாம்புனற்

கங்கை யேயங் குளதெய்வம் யாவையும்

தாணு வெங்க ளகிலேச ரேமற்றைத்

தலங்கள் யாவுந் தடமதிற் காசியே

பூணு மாசைமற் றொன்றே யுடல்விடும்

போது நன்மணி கர்ணிகைப் பூந்துறை

பேணு மாறு பெறவேண்டு மப்புறம்

பேயொ டாடினு மாடப் பெறுதுமே.


பெற்ற மூர்வதும் வெண்டலை யோட்டினிற்

பிச்சை யேற்றுத் திரிவதும் பேய்களே

சுற்ற மாகச் சுடலையில் வாழ்வதும்

தோலு டுப்பதுந் தொண்டர்க் கரிதன்றாற்

கற்றை வார்சடைக் காசிப் பதியுளீர்

கற்பந் தோறுங் கடைநா ளுலகெலாம்

செற்று மீளப் படைக்கவும் வேண்டுமே

தேவ ரீர்பதஞ் சிந்திப்ப தில்லையே."

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது